இறைவர் : அருள்மிகு ஸ்ரீ காளகஸ்தீஸ்வரர்
இறைவி :ஸ்ரீ ஞானாம்பிகை
தல மரம் : வில்வம் மரம்
தீர்த்தம் : தீர்த்தம்
அருள்மிகு ஸ்ரீ ஞானாம்பிகை உடனுரை காளகஸ்தீஸ்வரர் திருக்கோவில், கத்திரிநத்தம்,தஞ்சாவூர்
காளகஸ்தீஸ்வரர் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கத்திரிநத்தம் என்ற சிறு கிராமத்தில், காளகஸ்தீஸ்வரர் ஆலயம் இருக்கிறது. இங்கு அருள்பாலிக்கும் இறைவன் காளகஸ்தீஸ்வரர். இறைவி ஞானாம்பிகை. ஒரு சமயம் சப்த ரிஷிகளாகிய மரீசி, அத்ரி, புலத்தியர், பிருகு, ஆங்கிரசர், வசிஷ்டர், பரத்வாஜர் ஆகியோர், இறைவனின் சாபத்திற்கு ஆளானார்கள். அதில் இருந்து விடுபடுவதற்காக, 48 நாட்கள் இந்தக் கோவில் எதிரில் உள்ள குளத்தில் நீராடி, இத்தல இறைவனான காளகஸ்தீஸ்வரரை வழிபட்டு வந்தனர். இதையடுத்து அவர்கள் சாபம் நீங்கப் பெற்று, கடுமையான நோயும் நீங்கப் பெற்றனர் என தலபுராணம் கூறுகிறது. இதனாலேயே இத்தலம் ‘சப்தரிஷி நத்தம்’ என்ற பெயருடன் விளங்கியது. தற்போது இத்தலம் கத்திரி நத்தம் எனப் பெயர் மாற்றம் பெற்று விளங்குகிறது.
‘இத்தலம் ராகு - கேது பரிகார தலமாக விளங்குகிறது. இங்கு நவக்கிரகங்கள் முறையே மேல்திசையில் சனியும் சந்திரனும், வடதிசையில் குருவும், தெற்கு திசையில் ராகு, கேது, செவ்வாயும், கிழக்கு திசையில் புதன், சூரியன், சுக்ரனும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆகமப்படி சனி பகவான் நடுவில் இருப்பார். இங்கு சனி பகவான் முதலிலேயே இருப்பது விசேஷ அமைப்பாக கருதப்படுகிறது. ஆலயத்தின் தலவிருட்சமான வில்வம், தெற்குப் பிரகாரத்தில் உள்ளது. சுமார் 1000 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இந்த ஆலயம், அழகிய சுற்றுச் சுவருடன் விளங்குகிறது. இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் இந்த ஆலயத்தின் முன் அழகிய திருக்குளமும், கோடி விநாயகர் ஆலயமும் உள்ளன. .
ஸ்ரீ காளகஸ்தீஸ்வரர்
இந்த ஆலயத்தில் உள்ள விநாயகர், சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர், காலபைரவர், நந்தீஸ்வரர் ஆகியோர் திருமேனிகள் முதலாம் ராஜராஜ சோழன் காலத்து படைப்புகள் ஆகும். பழங்காலம் முதற்கொண்டு இக்கோவில் செங்கல் தளியாகவே இருந்து வந்துள்ளது. தற்போதுள்ள கட்டுமானம் தஞ்சாவூர் மராட்டியர் காலத்தில் கி.பி. 18-ம் நூற்றாண்டில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இக்கோவிலின் முன் மண்டபத்தில் தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர் முதலாம் துக்கோஜி எனும் துளஜாவின் கல்வெட்டு சாசனம் ஒன்று உள்ளது. அந்த சாசனம் ஆங்கீரஸ் ஆண்டு கார்த்திகை மாதம் 28-ம் நாள் செவ்வாய்க்கிழமையை குறிப்பதாகும். திருக்காளத்தி எனும் காளகஸ்திக்கு நிகரானதாகவும், தென் காளகஸ்தி என்ற சிறப்புடனும் இத்தலம் விளங்குகிறது.
திருக்கோயில் முகவரி :
அருள்மிகு ஸ்ரீ ஞானாம்பிகை உடனுரை காளகஸ்தீஸ்வரர் திருக்கோவில், கத்திரிநத்தம்,தஞ்சாவூர் தஞ்சாவூர் மாவட்டம் ,
திருக்கோயில் திறக்கும் நேரம்:
இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். இந்த ஆலயம் திங்கட்கிழமைகளில் பக்தர்களால் நிறைந்திருக்கும். அன்று ராகு கால வேளையான காலை 7.30 மணி முதல் 9 மணி வரை, இறைவனுக்கு சிறப்பு ஆராதனை நடைபெறும்.
அமைவிடம்:
தஞ்சையில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவிலும், புன்னை நல்லூர் மாரியம்மன் கோவிலில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது கத்திரிநத்தம் திருத்தலம்.